Header Ads

Recent

தனியார் பள்ளி வன்முறையில் ஆசிரியர்களின் பட்டச் சான்றிதழ்களும் எரிப்பு: கேள்விக்குறியான பணியாளர்களின் எதிர்காலம்

தனியார் பள்ளி வன்முறையில் ஆசிரியர்களின் பட்டச் சான்றிதழ்களும் எரிப்பு: கேள்விக்குறியான பணியாளர்களின் எதிர்காலம்

மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து,சின்னசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களின் பட்டசான்றிதழ்களும் எரிந்து சாம்பலானதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சுமார் 3,200 மாணவ, மாணவியர் பயிலும் சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் பள்ளிக்கு தீவைக்கப்பட்டது. பள்ளிக் கட்டிடம்பற்றி எரிந்தது. இதில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை சாம்பாலாயின.

இதில் முக்கியமாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டச்சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகிஉள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கூறும்போது, “பணியில் சேரும்போது எங்களது சான்றிதழ்களை பள்ளிநிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம்வைத்திருந்தது. நடந்த கலவரத்தில், எங்களது சான்றிதழ்களும் தீயில் கருகிவிட்டது. பள்ளி மூடப்பட்டுள்ள சூழலில் வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தவித்து வருகிறோம்.

கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம். தற்போதுதான் நிலைமை சற்று சரியானது. தற்போதுள்ள சூழலில் பள்ளி மீண்டும்இயங்குமா என்பது தெரியவில்லை. இந்த இக்கட்டான நிலையில், சான்றிதழ் இல்லாத எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அவரவர் சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

No comments